Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தமிழர் கால்வாய்: எல்லைக் கோடற்ற கடற் பரப்பில்

Saturday, June 30, 2007

எல்லைக் கோடற்ற கடற் பரப்பில்

சிங்களவர் பின்னும் சூழ்ச்சி வலைகள்!
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
விடுதலை பெற்ற நாள் முதலாக, பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழரைக் கொலை செய்வதற்காகலே இலங்கையின் கடற்படை பயன்பட்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டுத் தமிழரைச் சுட்டுக் கொன்று பழகியவர்கள் சிங்களக் கடற்படையினர். 1950களின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையில் வாழும் தம் உற்றார் உறவினரைச் சந்தித்து உறவு கொண்டாட வந்த தமிழகத் தமிழரே இலங்கைக் கடற்படையின் முதற் குறி. இவர்களைக் கள்ளத் தோணி என அழைத்துக் கொச்சைப் படுத்தினர், சுட்டுத் தள்ளினர்.
முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உறவுகள் இன்றும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் வாழ்கின்றனர். அவர்களுள் ஒருவர், கலைஞரின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர்கள் மன்னாரிலும் அநுராதபுரத்திலும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்து இராமேஸ்வரத்தில் தங்கிய கனகசுந்தரம்பிள்ளையே அப்துல் கலாமின் பள்ளிக்கால ஆங்கில ஆசிரியர்.
வடகிழக்கு மாகாணத்தின் ஒரே முதலமைச்சராகப் பணி புரிந்த வரதராஜப் பெருமாளின் தந்தையாரும் முன்னோரும் தமிழகத்து இராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.கைய நெருங்கிய உறவுகளைக் கொண்ட தமிழ்ச் சமுதாயம் கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அக் கடலைக் கடந்து தத்தம் உறவுகளைத் தொடர விழைந்ததற்குப் பெற்ற பரிசு, கள்ளத் தோணி என்ற பட்டப் பெயரும் சிங்களக் கடற்படையின் குண்டு மழையும்தான்.
கள்ளத் தோணிகளென்றும் கடத்தல்காரர் என்றும் பட்டம் சூட்டி, அவர்களை விரட்டிக் கொல்வதையே தொழிலாகக் கொண்டு, பாக்கு நீரிணையையும் மன்னார் வளைகுடாவையும் தன் ஆதிக்கத்துள் வைத்திருந்த சிங்களக் கடற்படை, 1970களில் இவர்களுக்குப் புதுப் பெயர் சூட்டியது. போராளிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அத்துமீறிய தமிழக மீனவர் என்றும் காரணம் காட்டி இவர்களைச் சுடத் தொடங்கியது. இலங்கைக் கடல் எல்லைக்குள்ளும் சுட்டுக் கொன்றது. இந்தியக் கடற்பரப்பிலும் சுட்டுக் கொன்றது.
கடற்பரப்பைத் தாண்டி இந்திய நில எல்லைக்குள் வந்து, ஒருமுறை பாம்பன் தீவுக்குள் நுழைந்து, கரையோர மீனவக் கிராமமான ஓலைக்குடாவுக்குள் புகுந்து அந்தக் கிராமத்தையே தீ வைத்துக் கொளுத்தியது. கேட்பாரற்றுத் தமிழக மீனவர் தம் எல்லைக்குள்ளேயே வதங்கி இறந்தனர். தம் குடிசைகளை இழந்தனர். தம் படகுகளைத் தொலைத்தனர். தம் வலைகள் எரியப் பார்த்துக் கொண்டிருந்தனர். தப்பினோர் தறிகெட்டு ஓடினர்.
பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா, ஆகிய இரு கடல்களின் இரு மருங்கிலும் வாழ்வோர் தமிழரே. மருந்துக்குக் கூடச் சிங்களக் கிராமத்தைக் காணமுடியாது. ஆனாலும் துப்பாக்கியால் சுடுபவர்கள் சிங்களவர்கள். அந்தக் கடற்படையில் மருந்துக்குக் கூடத் தமிழர் எவரும் இல்லை.
முழுக்க முழுக்கத் தமிழருக்குச் சொந்தமான, தமிழரின் வாழ்வாதாரங்களுக்கு அடிப்படையான, தமிழரின் உறவுகளுக்கு உயிரூட்டுகின்ற கடற் பரப்பு. அந்தக் கடற் பரப்பிலே சிங்களக் கடற்படை, பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழரைக் கொன்று குவித்து வருகின்றது. கள்ளத் தோணி என்றும், கடத்தல்காரர் என்றும், போராளி என்றும், பயங்கரவாதி என்றும், அத்துமீறிய மீனவர் என்றும் ஏதோ ஒரு காரணம் கூறி, எப்படியாவது கொலைசெய்ய வேண்டும் எனக் கருதி, தமிழரை அழிப்பதையே தொழிலாகக் கொண்டு கொன்று குவித்து வருகிறது.
மன்னார் வளைகுடாவின் தெற்கே, இலங்கையின் மேற்குக் கரை ஓரத்தில், சிங்கள மீனவர்களின் கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க வரும் சிங்கள மீனவர் வழி தவறியோ, தெரிந்தோ இந்தியக் கடல் எல்லைக்குள் வருவதும் மீன் பிடிப்பதும் வழமை. அந்த மீனவர்களுள் எவர் ஒருவரைக் காணவில்லை என்றாலே கொழும்பு அரசுக்கு வேகம் வரும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலமாகத் தூத்துக்குடிக்கும் இராமேஸ்வரத்துக்கும் செய்தி அனுப்பி அச் சிங்கள மீனவர்களை மீட்க உரியன செய்யும்.ந்நாள் வரை இந்திய எல்லைக்குள் அத்து மீறிய சிங்கள மீனவர் ஒருவரேனும் இந்தியப் படையினரால், காவல் துறையினால் அல்லது தமிழக மீனவர்களால் சுடப்பட்டார்கள் என்ற செய்தியோ, அந்த மீனவர்களின் படகுகள், வலைகள், மீன் பிடிபாடுகள் அழிக்கப்பட்டன என்றோ ஒரு செய்தியை யாராவது காட்டமுடியுமா?

எல்லைக் கோடற்ற கடற் பரப்பில் நாட்டு எல்லைகளை மீனவர் கடப்பது, உலகெங்கும் நடைபெறும் நாளாந்த நிகழ்வு. அத்தகைய மீறல்களைக் கைது மூலம் தீர்ப்பதே உலக வழமை. சகட்டுமேனிக்குச் சுட்டுத் தள்ளுவது சிங்களக் கடற்படையின் தமிழர் அழிப்புக் கொள்கையின் நீட்டமே!
கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாகத் தமிழக மீனவரைச் சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்று வந்தனர். முதலில் கொழும்பு அரசை எச்சரித்த தமிழக முதல்வர், அடுத்த நாள், இனியும் இக்கொலைகள் நிகழுமாயின், மீனவர் கைகள் மீன்களை மட்டும் பிடித்துக் கொண்டிரா எனக் கூறினார். அதற்குப் பின்னரும் கொலைகள் தொடர்ந்த நிலையில் திமுக அணியினர் இலங்கைத் துணைத் தூதரைச் சந்தித்தனர். துணைத் தூதரின் கூட்டுக் கண்காணிப்பு முன்மொழிவைத் தமிழக முதல்வர் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்.
இந்திய இலங்கைக் கடல் எல்லையின் இரு புறமும் இரு கடற் படைகளும் இணைந்து செயற்பட்டு, இருநாட்டுச் சட்டமீறல்களை நிறுத்துவதே கூட்டுக் கண்காணிப்பின் அடிப்படை.
கடந்த 60 ஆண்டுகளாக, தென் முனையில் யாருடனும் வம்புக்குப் போகாத இந்தியக் கடற்படையை ஈழத்தமிழருடன் மோத வைப்பதே இந்தச் சூழ்ச்சி வலையின் பின்னணி.
ஜே. ஆர். ஜெயவர்த்தனா எந்த அணுகுமுறையைக் கையாண்டாரோ அதே அணுகுமுறையை இராஜபக்சா கையாள்கிறார்.
இந்தியப் படை இலங்கை மீது படையெடுத்து வந்தால் நிறைகுடம் வைத்து வரவேற்போம் எனக் கூறியவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா. தமிழரைக் காக்க வரும் படையைத் தமிழருக்கு எதிராகத் திருப்பும் இராஜதந்திரத்தை அவர் கணித்து வைத்திருந்தார். இந்திய அமைதிப் படை இலங்கைக்குப் போனதும் ஆயிரக் கணக்கில் தமிழரைக் கொலை செய்து திரும்பியதும் வரலாறு. தமிழரைக் காக்கப் போன படை சிங்கள வீரர் ஒருவரையோ, சிங்களப் பொதுமகர் ஒருவரையோ கொல்லவில்லை என்பதும் வரலாறு. சிங்களவரின் இராஜதந்திர வெற்றிக்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
தமிழரைக் கொன்றொழிக்கும் ஒரே நிகழ்ச்சித் திட்டத்துடன் 60 ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் கொழும்பு அரசு, கூட்டுக் கண்காணிப்புப் போர்வைக்குள், இந்திய அரசை ஈர்த்து, ஈழத்தமிழருடனான தன் பகையை இந்தியா மூலம் தீர்க்க முயல்கிறது.
இந்திய நாவாய் வீரரைத் தன்பக்கம் இழுப்பது முதற் படி. இந்தியக் கடற் படைக் கப்பல்களை ஈர்ப்பது இரண்டாவது படி. கடற்படை விமானங்களைக் கேட்பது மூன்றாவது படி. ஈழத்தமிழரை அழிக்கும் பணியில் இந்தியாவை நேரடியாக ஈடுபட வைப்பது நான்காவது படி. முன்பு போல இந்திய - ஈழத் தமிழர் உறவு முறிவதற்குப் படிநிலை முயற்சியில் ஈடுபடும் கொழும்பு அரசின் சூழ்ச்சி வலையில் இந்தியா சிக்கி விடுமோ என்ற அச்சம் உண்டு.
விடுதலைப் புலிகளே தமிழக மீனவர்களைக் கொல்கிறார்கள் என்பதே கொழும்பின் இராஜதந்திரச் சூழ்ச்சிப் பாதையின் முதல் அறிவிப்பு. புதுதில்லி நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் நாராயணசுவாமி, இலங்கையின் இந்தக் கபட வேட இராஜதந்திரச் சூழ்ச்சி அறிவிப்பைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர், இந்தியாவுடன் சுமுக உறவு வைத்துக் கொள்ளவே விழைகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தை இந்தியா புரிந்து கொண்டு, சிங்களவரின் சூழ்ச்சி வலையில் சிக்காதிருக்கவேண்டும்.

2 Comments:

Blogger றிசாந்தன் said...

வணக்கம் ,

தமிழீழ வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும் நோக்கில் இந்தத் தளம் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது .

http://www.pageflakes.com/rishanthan

இங்கு தங்களின் வலைபூவானது இணைக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் .

உங்களை தொடர்புகொள்ள வேறு வழிகள் தெரியவில்லை ,

நன்றி !

5:29 AM  
Blogger Shan Nalliah / GANDHIYIST said...

GREETINGS FROM NORWAY!

2:04 PM  

Post a Comment

<< Home