Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தமிழர் கால்வாய்: பாக்குநீரிணையில் எல்லைக் கோடு

Wednesday, September 28, 2005

பாக்குநீரிணையில் எல்லைக் கோடு

பாக்குநீரிணையில் எல்லைக் கோட்டு மிதவைகள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

அறிமுகம்:பாக்குநீரிணை ஓர் உள்ளகக் கடல். வடக்கே வங்காள விரிகுடாவும் தெற்கே மன்னார் வளை குடாவும் பாக்கு நீரிணையைத் தழுவி நிற்கின்றன.பூமியின் நெடுங்கோட்டின் 80 பாகையில் உள்ள தமிழகத்தின் கோடியக்கரையில் இலங்கையின் காரைதீவு வரையான நெடுங்கோடு வங்காள விரிகுடாவையும் பாக்கு நீரிணையையும் பிரிக்கிறது.தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே நகரும் மண்மேடுகளே பாக்கு நீரிணையை மன்னார் வளைகுடாவிலிருந்து பிரிக்கின்றன.பாக்கு நீரிணையை இந்தியாவும், இலங்கையும் தத்தம் கரையோரங்களை ஒட்டிய பகுதிகளாக வரையறுத்து எல்லைக்கோடிட்டுப் பிரித்து வைத்திருக்கின்றன.கோடிக்கரையிலிருந்து தனுஷ்கோடி வரை நீண்ட இந்தியக் கரையோரத்தின் நீளம் ஏறத்தாழ 250 கிமீ.காங்கேயன்துறையிலிருந்து தலைமன்னார் வரை நீண்ட இலங்கைக் கரையோரத்தின் நீளம் ஏறத்தாழ 180 கிமீ. இலங்கையின் எல்லைக்குள் பாக்கு நீரிணைச் சிறு தீவுகளின் கரையோரங்களின் நீளம் ஏறத்தாழ 90 கிலோமீட்டர்.பாக்குநீரிணையை இரு நாடுகளுக்காகப் பிரிக்கும் எல்லைக்கோட்டின் நீளம் ஏறத்தாழ 350 கிலோமீட்டர்.பாக்குநீரிணையின் மொத்த மேற்பரப்பளவு தோராயமாக 10,000 சதுர கிமீ. இதில் 4,500 சதுர கிமீ. மேற்பரப்பளவு இந்தியப் பகுதிக்குள்ளும், 5,500 சதுர கிமீ. மேற்பரப்பளவு இலங்கைப் பகுதிக்குள்ளும் உள்ளது.ஆழங்கள்:வங்காள விரிகுடாவிலிருந்து பாக்குநீரிணைக்குள் கப்பல் புகுவதற்கு ஏற்ப மூன்று வாய்க்கால்களே உள. அவையாவன வடவாய்க்கால், நடுவாய்க்கால், மற்றும் தென்வாய்க்கால். வடவாய்க்காலும், நடுவாய்க்காலும் 8 மீ. ஆழமுள்ளனவாய் இந்திய எல்லைக்குள் அமைந்துள்ளன. 12 மீ. வரை ஆழமான தென்வாய்க்கால் இலங்கை எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த மூன்று வாய்க்கால்களையும் பிரிக்கும் இருதரவைகள் 3 மீ. ஆழம் உடையன.இந்திய எல்லைக்குளுள்ள பகுதியின் 65% கடல் 10 மீ. ஆழத்துக்குள் கரையிலிருந்துப் படிப்படியாக ஆழமாகிறது. எஞ்சிய 35% கடல் சராசரியாகப் 11 மீ. ஆழம் கொண்டது.இலங்கையின் எல்லைக்குள் கரையிலிருந்து 50% கடல் 10 மீ. ஆழத்துக்குக் கரையிலிருந்துப் படிப்படியாக ஆழமாகிறது. எஞ்சிய 50% கடல் சராசரியாகப் 13 மீ. ஆழம் கொண்டது.பாக்குநீரிணையின் ஆகக்கூடிய ஆழம் 15.2 மீ. உள்ள கிணறு தான். இது நெடுந்தீவுக்கு அருகில் உள்ளது. இந்திய, இலங்கை எல்லைக்கோட்டின் நீளமுழுவதிலும் ஆகக்கூடிய ஆழம் 13 மீ. ஆகக்குறைந்த ஆழம் 6 மீ.ஊர்கள்:தனுஷ்கோடியிலிருந்து கோடிக்கரை வரை உள்ள தமிழகக் கடற்கரை ஓரத்தில் பதினொரு பேரூர்கள் உள்ளன. அவையாவன, தனுஷ்கோடி,இராமேஸ்வரம், மண்டபம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி, அம்மாப்பட்டினம், காட்டுமாவடி, அம்மணிசத்திரம், அதிராம்பட்டினம், கோடிக்கரை.இவைதவிர பல சிற்×ர்களும் உள.மீனவர் துன்பம்:1921ஆம் ஆண்டுக்கு முன்பு, பாக்குநீரிணையில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே மீன்பிடி எல்லைகள் இருக்கவில்லை. அக்காலத்தில் வள்ளங்களோ, வலைகளோ, தொழில்நுட்பமோ சொல்லுமளவு வளர்ச்சியடையவுமில்லை.1921இல் சென்னை மாகாணத்தின் சார்பிலும் இலங்கையரசின் சார்பிலும் மீன்பிடி எல்லைகளை வரையறுக்கும் ஓர் உடன்பாடு ஏற்பட்டது.1974இல் பாக்குநீரிணையின் மீன்பிடி உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தப் பொருந்தக்கூடிய, இறைமையை வரையறுக்கும் எல்லைக்கோட்டு நிலைகளை அமைத்து உடன்பாடு ஏற்பட்டது. எனினும் இருநாட்டு மீனவர்களும், மீனவர்கள் அல்லாதவர்களும் இந்த எல்லைக்கோட்டை மதிக்காது நடந்து வந்தனர். இந்தியா இதுபற்றி அதிகம் அக்கறை கொள்ளவில்லை.1949 வரை இலங்கை, இந்தியப் பயணங்கள் குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாடுகளின்றி நடைபெற்று வந்தன. 1949இல் குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டை இலங்கை அரசு நடைமுறைக்குக் கொணடுவர, இந்தியாவும் அதனைப் பின்பற்றியது. இந்தியாவிலிருந்து ஆவணங்களின்றி இலங்கைக்குப் போய் வருவோரை கள்ளத்தோணிகள் என இலங்கை அழைத்தது. இத்தகையோரின் போக்குவரவைக் கட்டுப்படுத்தத் தலைமன்னாரிலும், காரைநகரிலும் கடற்படை முகாம்களை இலங்கை அமைத்துக் கண்காணிக்கத் தொடங்கியது.பாக்குநீரிணையில் போய்வருவோரையும் மீன்பிடிப்போரையும் கைது செய்தலும், சுட்டுக் கொல்லுதலும் அக்காலங்களில் தொடங்கின. இந்தியக் கரையோரங்களில் சென்னை மாகாண அரசின் காவல்துறை அமைப்புகளைத் தவிர, இந்திய அரசின் கடற்படையமைப்பு எதுவும் 1980 வரை இருக்கவில்லை.இதனால் பாக்குநீரிணையில் இலங்கைக் கடற்படையின் கை தொடக்க காலம் முதலாக ஓங்கியிருந்தது. அதுமட்டுமல்ல, இலங்கையின் தலைமன்னார் கடற்படை முகாமிலிருந்துத் தெற்கே கற்பிட்டிக் கடற்கரை முகாமிற்குச் செல்லும் ஆழ்கடல் இயந்திர வள்ளங்கள் பாம்பன் தீவுக்கும் மண்டபத்திற்கும் இடையேயுள்ள பாம்பன் கால்வாயையே பயன்படுத்தின. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்கியது.1974இன் எல்லை உடன்பாடின் பின் தமிழக மீனவர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் அதிகரித்தது.1983இன் பின் தொடங்கிய ஈழப்போர்கள் பாக்குநீரிணையில் பயணிக்கும் அனைவரையும் போராளிகளாகக் கருதவும், சுட்டுவீழ்த்தி அழிக்கவும் இலங்கைக் கடற்படைக்கு ஆதிபத்தியத்தைக் கொடுத்தது. இன்றுவரை அந்த ஆதிபத்தியம் தொடர்வதால் தமிழக மீனவர்களில் 1,000 அதிகமான எண்ணிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். 1,000 படகுகளுக்கு மேல் சேதமுற்றுள்ளன. பலகோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளும், கருவிகளும் அழிந்துள்ளன.தமிழக மீனவர்களின் இடர்களையும் வழி 1:அறிவூட்டல்:இந்தியப் பகுதிக்குள்ளேயே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டுமென கடலுக்குப் போகும் ஒவ்வொரு மீனவனுக்கும் கருத்திலிருக்குமாறு அறிவூட்ட வேண்டியது தமிழக மீன்வளத்துறையின் கடமை.பேரூர் ஒவ்வொன்றிலும், சிற்×ர் ஒவ்வொன்றிலும் வரைபடம் ஒன்றைப் பெரிய அளவில் (3 மீ. உயரம் 3 மீ. அகலம்) வரைந்துச் சமுதாயக் கூடத்தினருகில் பொருத்தி வைக்கவேண்டும். அந்த ஊரிலிருந்து வடக்காகச் சென்றால் எத்தனை கிமீ. தொலைவில் எல்லைக்கோடு வரும், கிழக்காகச் சென்றால் எத்தனை கிமீ. தொலைவில் எல்லைக்கோடு வரும், தெற்காகச் சென்றால் எத்தனை கிமீ. தொலைவில் எல்லைக்கோடு வரும் என்ற தகவல் துல்லியமாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.இந்த வரைபடங்களைத் தயாரிப்பதில் நிலஅளவைத் துறையினர் பங்குபெற வேண்டும். கோடிக்கரையிலிருந்து தனுஷ்கோடி வரையிலானக் கடற்கரை ஓரமெங்கும் ஆகக் குறைந்தது இத்தகைய வரைபடத் தட்டிகள் 50 எண்ணிக்கைக்கு அதிகமாக அமைக்கலாம். மீனவரின் செறிவை ஒட்டி மீன்வளத்துறையினர் எந்த ஊரில் அமையவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். நனையாத, வலையாத, பிளாஸ்டிக்கில் அச்சிட்ட 50 செமீ. அகலம் 50 செமீ. உயரம் கொண்ட வரைபடத் தகடு ஒன்று, ஒவ்வொரு இயந்திரப் படகிலும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.இந்தப் பேரூர்களிலும், சிற்×ர்களிலும் 8ஆம் வகுப்பிற்கு மேல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குச் சமூகக் கல்விப் பாடத்தின் பகுதியாக இந்த வரைபடத்தின் அகல, நீளங்கள், தூரங்கள், கடல் ஆழங்கள், மீன் வகைகள், வலைகள், கருவிகள் யாவற்றையும் பற்றிய அறிவைப் படிப்படியாக ஊட்டுமாறு பாடத்திட்டப் பகுதி அமையவேண்டும்.ஒலிபெருக்கிகள், ஒலி,ஒளி விளக்கக் கருவிகள், தமிழில் உரையாற்றக்கூடியப் பேச்சாளர், விளக்க வெளியீடுகள் கொண்ட ஒரு பேருந்து, நாளுக்கு ஒரு கிராமமெனத் தேர்ந்து மீனவர்களுக்குக் கடல் எல்லையை விளக்கும் மீன்வளத்துறையின் பிரசார வாகனமாக அமைய வேண்டும்.2:எல்லைக்கோடு காட்டல்:இந்திய இலங்கை எல்லைக்கோட்டு வரைவு நிலைகளிலிருந்து இந்தியப் பகுதிக்குள் ஒரு கிமீ. உள்ளே அமையும் சமாந்திரக் கோட்டில் எல்லைகாட்டி மிதவைகளை இந்தக் கோட்டின் 550 கிலோமீட்டர் தொலைவுக்கும் அமைக்க வேண்டும். இந்திய, இலங்கை எல்லைக்கோட்டில் மிதவைக்கோடு அமைப்பதெனில் இலங்கை, இந்திய அதிகாரிகள் கலந்து பேசவேண்டும். இந்தியப் பகுதிக்குள் 1 கிலோமீட்டர் உள்ளே தள்ளிய சமாந்திரக் கோட்டில் அமைப்பதெனில் அது மாநில அரசாகிய தமிழக அரசின் மீன்வளத்துறையே செய்துவிடலாம்.ஆகக் குறைந்தது 5 கிலோமீட்டர் இடைவெளி இரு மிதவைகளுக்கிடையே இருக்க வேண்டும்.கடலின் தரையில் கருங்கல் நங்கூரம் இறக்கித் துருப்பிடியாக் கம்பிகளைப் பொருத்தி எல்லைக்கோடு மிதவைகளை இணைக்க வேண்டும். எல்லைக் கோடு மிதவைகள் ஆகக்குறைந்தது ஒரு மீட்டர் விட்டமும், ஒரு மீட்டர் உயரமும் உள்ளவையாக இருக்க வேண்டும். பார்த்தவுடன் அடையாளம் காணும்படியாக மினுங்கும் வண்ணப்பூச்சுத் தெரியவேண்டும். எல்லைக்கோட்டு மிதவை வண்ணப்பூச்சு அனைத்துலகத் தரக் கட்டுப்பாட்டுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மிதவையின் உச்சியில் விளக்குப் பொருத்தியிருக்க வேண்டும். பகலில் சூரிய ஒளி ஆற்றலைச் சேமித்து இருள் கவிந்ததும் தானாகவே ஒளிரக் கூடியதாக இவ்விளக்குகள் அமையும். 3 கிலோமீட்டர் வரை கடற்பரப்பின் ஈரலிப்பு வலையத்தை ஊடறுத்து ஒளிதெரியக் கூடியதான வெளிச்ச அடர்த்தியை அவ்விளக்குகள் பெற்றிருக்க வேண்டும். மிதவையின் மேலே சிறிய அளவிலான இந்தியத் தேசியக் கொடியைப் பறக்க விடவேண்டும். அல்லது மிதலையில் வரையலாம். எல்லைக்கோட்டு மிதவைகளுக்கானக் கம்பியின் ஆகக்கூடிய நீளம் 20 மீ. ஆகும். வெள்ளம், வற்று இவற்றுக்கு இடையிட்ட கடல்மட்ட உயரத்தைக் கணித்தாலும், வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கடல்மட்ட வெள்ளப்பெருக்களவு உயர்வதுடன் புயற்காற்றும் பாக்குநீரிணையை அலைக்கழிக்கும் என்பதை உளத்திருத்தியே ஒவ்வொரு மிதவைக்குரியக் கம்பியின் நீளத்தைக் கணிக்க வேண்டும்.இந்திய, இலங்கை எல்லைக்கோட்டுக்குக் கிழக்குப் பக்கத்தில் பாக்கு நீரிணையின் இலங்கைப் பகுதிக்குள் எல்லைக்கோட்டிலிருந்து உள்ளே ஒரு கிமீ. தள்ளி அமையும் சமாந்திரக் கோட்டில், இதையொத்த எல்லைக்கோட்டு மிதவைகளை அமைக்குமாறு இலங்கையரசை இந்திய அரசு கோருவதும், அவ்வாறு அமைவதும் தமிழக மீனவருக்கு மேலதிக பாதுகாப்பை உறுதி செய்யும்.

0 Comments:

Post a Comment

<< Home