Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தமிழர் கால்வாய்: உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு மலர் 30.7.2005

Friday, September 16, 2005

உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு மலர் 30.7.2005

சேதுக் கால்வாய் - சிங்களவரின் அச்சங்கள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன், (ஐ.நா.வின் முன்னாள் ஆலோசகர்)
இரண்டு கோடி மக்கள்; 65,000 சகிமீ. பரப்பளவு; இருப்பதோ ஒரு துறைமுகம்; எண்ணெய் நிரப்ப, பழுதுபார்க்க, சரக்குப் பரிமாற, மாலுமிகள் ஓய்வுபெற என மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வந்து போகும் கப்பல்களால் வற்றாப் பொருளாதாரச் சுழற்சி.
உங்களிடம் பத்துக்கு மேற்பட்ட சிறந்த துறைமுகங்கள். சிறிய துறைமுகங்களோ பற்பல; நீங்களோ பெரிய நாடு; நாங்கள் சிறிய நாடு. எங்களின் ஒரே ஒரு துறைமுகத்தின் வளர்ச்சியையும் சேதுக் கால்வாய்த் திட்டம் குழப்பிவிடும்; பெருந்தன்மையுடன் எங்களை வளர விடுங்கள்; சேதுக் கால்வாய்த் திட்டத்தைக் கைவிடுங்கள்.
இவையும் பிறவுமான கருத்துகளைச் சந்திரிகா தலைமையிலான அரசு இந்தியாவுக்கு எடுத்துக் கூறி வருகிறது; இந்தியாவின் சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிட, வல்லுநர் மற்றும் அரசியல்வாதிகள் கொண்ட உயர்மட்டக்குழுவையும் அமைத்துளது.
சேதுக் கால்வாயத் திட்டத்துக்குத் தமிழகம் புதுவையில் எதிர்ப்புத் தெரிவித்த அரசு சாராக் குழுக்களுக்கு இலங்கை அரசின் தூண்டுதலும் மறைமுக உதவியும் இருந்தன என அரசல் புரசலாகப் பேசியோரும் உளர்.
சந்திரிகாவின் தாயாரான பிரதமர் சிறீமாவோ 1960களில் இத்திட்டத்தை எதிர்த்தார். பிரதமர் நேருவுக்குக் கடிதமும் எழுதினார். சேதுக் கால்வாயை அமைக்க விரும்பிய பிரதமர் நேரு, அதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை இதனால் கைவிட்டார். இலங்கையும் இந்தியாவும் பரிமாறிய அக் கடித நகல்களைத் தமிழக சட்டசபையில் முன்வைத்து 1980களில் பேசிய பழ. நெடுமாறன் சேதுக் கால்வாயை அமைக்க வலியுறுத்தினார்.
அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலர் கொழும்புக்குப் போயிருந்தார். இலங்கையின் சிக்கல்களையும் கவனத்தில் கொண்டே சேதுக் கால்வாயை அமைப்போம் எனக் கூறியிருந்தார். இப்படிக் கூறிய செய்தி வரிகளின் அச்சு மைகாய முன்பே, இலங்கையின் கருத்துகளைக் கேளாமல் சேதுக் கால்வாய்த் திட்டத்துக்கு இந்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளதாகக் கொழும்பு குமுறிக் கொண்டிருப்பதுடன், இந்திய வெளியுறவுச் செயலரின் இரட்டை நாக்குப் போக்கைக் கண்டித்தும் வருகிறது.
சிங்கள மக்களை இத்திட்டத்துக்கு எதிராகக் கிளப்புவதற்காகக் கற்பனைச் செய்திகள் பல கொழும்பில் மிதந்துள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கண்ட மேடையை அகழ்வதால், இலங்கைத் தீவின் வடமேற்குப் பகுதி கடலுக்குள் சாய்ந்துவிடும் அபாயம் உள்ளதான செய்தி அவற்றுள் ஒன்று.
ஈழத் தமிழ் மக்களையும் இத்திட்டத்துக்கு எதிராகக் கொழும்பு தூண்டி வருகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து 4 கிமீ. தொலைவில் கால்வாய் அமைவதாகவும், இந்தியக் கடற்படைக் கப்பல் பீரங்கிகளின் வீச்செல்லை வலயத்துள் தமிழ் மக்கள் சிக்குவர் என்றும், இதைத் தெரிந்தும் விடுதலைப் புலிகள் இத்திட்டத்தை எதிர்க்காமல் இருப்பது வியப்பே என்றும் கொழும்பில் கற்பனைகளைப் பரப்புகின்றனர்.
சேதுக் கால்வாய்த் திட்ட அறிக்கைகள் யாவும், இணைய தளங்களில் கடந்த எட்டு மாதங்களாக, அவ்வப்போது இறக்கிப் படியெடுக்கக் கூடியதாக, அனைவருக்கும் கிடைக்கின்றன. வியப்பென்னவெனில் இவற்றைத் தமக்கு எவரும் காட்டவில்லை என இலங்கை அரசு கூறிவருகிறது.
இந்த அச்சங்கள் அனைத்தும் தேவையற்றவை. பிராந்தியத்தின் எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் தமக்கும் சாதகமாக்கி, அதன் பயன்கள் தம் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்வதே இலங்கை அரசின் கடன்.
12 மீ. ஆழமும் 300 மீ. அகலமும் கொண்ட சேதுக் கால்வாய்க்காக 58 கிமீ. தொலைவுக்கு, 8 கோடி கனமீ. சேற்று மணலை ஒரேஒருமுறை தூர்வாரினால் கண்ட மேடைக்கு எந்தப் பாதிப்பும் வராது. நெதர்லாந்து நாட்டுத் துறைமுகங்களைச் சேற்றால் நிரவாமல் காக்க ஆண்டுதோறும் 5 கோடி கனமீ. சேற்று மணலைத் தூர்வாருகின்றனரே.
இந்திய எல்லைக்குள் அமையவுள்ள சேதுக்கால்வாய் யாழ்ப்பாணக் குடநாட்டிலிருந்து ஆகக் குறந்தது 16 கிமீ. தொலைவில் உள்ளது; கச்சதீவிற்குக் கிழக்கே 4 கிமீ. தொலைவில் அமைவது.
மக்கள் தொகையால், எண்ணெய் வளத்தால், இயற்கைச் செல்வங்களால், நிலப்பரப்பால் பெரிய நாடு மலேசியா. குட்டித் தீவு நாடான சிங்கப்பூரில் குடிக்கும் நீர்முதலாக அனைத்துமே இறக்குமதியாகின்றன; மக்கள் தொகையும் குறைவு. ஆனாலும் அயராத, கடின உழைப்பாற்றலுள்ள மக்களும், திட்டமிட்டு நாட்டை வளர்க்கும் அரசியல் தலைமையும் சிங்கப்பூரில் இருப்பதால் மலேசியாவின் முக்கிய துறைமுகங்களான பினாங்கும் கிளாங்கும் பெறமுடியாத புகழையும் வருவாயையும் சிங்கப்பூர்த் துறைமுகம் ஈட்டித் தருவதுடன் ஆசியாவின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.
கொழும்புத் துறைமுத்தை வளர்க்க ஆங்கிலேயர் கொச்சியிலிருந்து 1920களில் மலையாளிகளை அழைத்துச் சென்றதற்குச் சிங்களவரின் இயலாமையே காரணம். 1930களின் பிற்பகுதியில், சிங்களவர் கலவரம் செய்து, மலையாளிகளைக் கொழும்புத் துறைமுகத்திலிருந்து விரட்ட முயன்றதைத் தடுக்கப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஏ. கே. கோபாலன் கொழும்புக்குச் சென்றார்; சிங்களத் தலைமை ஒப்பவில்லை; மலையாளிகள் கொச்சி திரும்பினர், சிங்கப்பூரைவிடச் சிறப்பாக வளர்ந்திருக்க வேண்டிய கொழும்புத் துறைமுகம் இன்றும் நொண்டி நடைபோடுவதற்கு அமையவுள்ள சேதுக் கால்வாய் காரணமா?
சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால், சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களுக்குப் பாக்கு நீரிணை இயற்கையான ஒதுக்குப் புறமாகும். கப்பல்கள் பழுதுபார்க்கும் துறைமுகங்கள் பாக்கு நீரிணையின் இரு பக்கமும் பெருகும். கிழக்கு, மேற்கு மற்றும் இந்தியச் சரக்குகளின் பரிமாற்றத்துக்குப் புதிய துறைமுகங்கள் அமையும்; பயணிகளின் துறைமுகங்களும் பெருகும்; இந்தியக் கரையில் தூத்துக்குடி மட்டுமல்ல, நாகப்பட்டினமும் வளரும், தனுஷ்கோடியில் மீண்டும் கப்பல் பழுதுபார்ப்பதைப் புதுப்பிப்பர். இலங்கையில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, காங்கேயன்துறை, ஊர்காவற்றுறை ஆகிய துறைமுகங்கள் தானாக வளரும். மாதோட்டம் மீண்டும் புத்துயிர் பெறும். திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவம் வளரும்.
பாக்கு நீரிணையின் இருபுறமும் வாழும் மீனவரின் மீன்பிடி எல்லைகள் விரியும். தாய்லாந்து, தாய்வான், யப்பான், பிரஞ்சு மற்றும் இந்தோனீசிய மீன்பிடிக் கப்பல்கள் வங்காள விரிகுடாவுக்குள் வந்து, இந்திய மற்றும் இலங்கைப் பொருளாதாதர வலயத்துள் மீன்பிடித்து வருகின்றன. இந்த வளங்களை இராமேசுவரம் மற்றும் மன்னார் மீனவர்கள் சேதுக் கால்வாய் வழி பாரிய மீன்பிடிக் கப்பல்களில் வங்காள விரிகுடாவுள் சென்று, சில வாரங்கள் கடலில் தங்கி மீன் பிடிப்பர். ஊடுருவும் பிறநாட்டு மீன் பிடிக் கப்பல்களை விரட்ட இந்தியக் கடலோரக் காவற்படை சீறிப் பாயும்; தமிழ் மீனவரை நோக்கிய இலங்கைக் கடற்படைப் பீரங்கிகள், பிறநாட்டு மீன்பிடிக் கப்பல்களை விரட்ட உதவும்.
கடின உழைப்புள்ள மக்கள்; வற்றாத திறமையுள்ள மக்கள்; கடலாடுவதில் தணியா ஆர்வமுள்ள மக்கள்; வளர்ச்சியை வாழ்வாக்கும் மோகமுள்ள மக்கள்; இம்மக்களை நெறிப்படுத்தி, வேகமான வளர்ச்சிக்குத் திட்டமிடும் அரசியல் தலைமை; இதனாலன்றோ சேதுக் கால்வாயின் இரு கரைகளிலும் வாழும் தமிழ் மக்களும், சிறப்பாக மீனவரும் சிறந்த எதிர்காலத்தைப் பெற உள்ளனர்.
இதே கண்ணோட்டத்துடன் முன்னேறக் கொழும்புத் தலைமைக்கு சேதுக் கால்வாய் நல்வாய்ப்பு ஆகும். சேதுக் கால்வாய்த் திட்டத்தை ஒட்டிக் கற்பனையான அச்சங்களைக் கைவிட்டு, கொழும்புத் துறைமுகத்தை வளர்க்க, கடின உழைப்பும் கூர்மையான தொழினுட்ப அறிவும் கொண்ட சிங்களக் குமுகாயத்தை உருவாக்குவதே கொழும்பு அரசின் முதற் பணி.
பயணிகள், மீன்பிடி மற்றும் சரக்குக் கப்பல் தொடர்பாக இந்திய - இலங்கைக் கூட்டு வளர்ச்சித் திட்டங்களை அமைத்துக் கொழும்புத் துறைமுகத்தைச் சிங்கப்பூருக்குச் சமமானதாக, அதைவிடச் சிறப்பானதாக வளர்ப்பதே கொழும்பு அரசின் முன்னுள்ள பாரிய பணி.

0 Comments:

Post a Comment

<< Home