கொடுமுடி சண்முகம்
நூல் விமர்சனம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன
சேது சமுத்திரம் - கப்பல் கால்வாய்
கொடுமுடி சண்முகம்
பக்கங்கள் 112, விலை 40/-
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 600014
ஆழமற்ற பாக்கு நீரிணையில் ஆழ்கடல் கப்பல்களையும் பயணிக்க வைக்கலாம் என்ற 145 ஆண்டு காலக் கனவு, 2005இல் நனவுக்கு வரத் தொடங்கியுள்ளது. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு திட்டங்களைத் தயாரித்துக் கிடப்பில் போடுவதை வழமையாகக் கொண்ட அரசு, இத் திட்டத்துக்கு ஒருவாறு ஒப்புதலளித்து, பணியையும் தொடங்கியுள்ளது.
காலத்துக்குக் காலம் ஆய்ந்து வரைந்த திட்ட அறிக்கைகள் பலவுள் 1980களில் இலட்சுமி நாராயணன் குழு வரைந்த அறிக்கையும் ஒன்று. அந்த அறிக்கையைத் தயாரிப்பதற்குரிய அடிப்படைத் தரவுகளைத் திரட்டி, கள ஆய்வுகளை மேற்கொண்ட தமிழக அரசின் வல்லுநர் குழு உறுப்பினருள் ஒருவர் கொடுமுடி சண்முகம்.
பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணிபுரிந்த காலங்களில் இக் கள ஆய்வுப் பணிக்காகத் தமிழக அரசு இவரை அனுப்பியது. அரசுக்கு அறிக்கை எழுதிக் கொடுத்தபின், தன் பணி முடிவடைந்து விட்டதாக அவர் கருதவில்லை. தமிழ் மக்களுக்குடன் தன் இனிய அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார். சேது சமுத்திரம் கப்பல் கால்வாய் என்ற 112 பக்க நூலைப் பாவை பப்ளிகேஷன்ஸ் மூலம் தந்துள்ளார்.
அறிவியலாளர் ஒருவருக்குரிய கண்ணோட்டத்துடன் இந்த நூலை எழுதியுள்ளார். அதே நேரத்தில் சாதாரண வாசகரை அவர் மறந்துவிடவில்லை.
கள ஆய்வுகள் பற்றித் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. அதுவும் தமிழர் கால்வாய்த் திட்டம் பற்றிய கள ஆய்வுபற்றிய தொகுப்பு, தமிழரின் வளர்ச்சிக்குத் தேவையான ஆவணங்களுள் ஒன்று.
வரை படங்கள் நூலுக்கு அணி செய்கின்றன. அட்டவணைகளை அங்கங்கே தந்திருப்பதால், வாசகர் எளிதாகச் செய்தியைப் புரிந்து கொள்வர். குமரிக் கண்டத்தின் தோற்றம் பற்றிய கட்டுரை, பாக்கு நீரிணையின் ஆழமின்மைக்கான காரணத்தை விளக்குகிறது.
நூலின் அமைப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். பதிப்பாசிரியர் ஒருவரின் துணையை நாடியிருக்கலாம். வரலாறு, கள ஆய்வு, சக ஆய்வாளர், தகவல் திரட்டல் எனப் பல்வேறான செய்திகள், அதுவும் தேவையான செய்திகள், நூல் அமைப்பு ஒழுங்கின்மையில் புதைந்துள. தேர்ந்து படித்துப் பயன் பெறும் பணியை வாசகரிடம் விட்டுள்ளனர் ஆசிரியரும் பதிப்பாளரும். ஆசிரியர் எழுதியதை அப்படியே பதிப்பிக்கும் வழமை தமிழ்ப் பதிப்பாளருக்கு உண்டு. இந்த நூல் விதி விலக்கல்ல.
அறிவியலைத் தமிழில் எளிதாகத் தரமுடியும் என்பதற்கு இந்த நூல் நல்லதொரு சான்று.
0 Comments:
Post a Comment
<< Home