Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தமிழர் கால்வாய்: October 2005

Tuesday, October 25, 2005

நிலநடுக்கம் - ஆழிப்பேரலை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறிவதற்குரிய தொழில் நுட்பம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையே!
ஆனாலும் ஆழிப் பேரலை வரக்கூடும் என எச்சரிக்கும் தொழில் நுட்பம் வந்துவிட்டது! பல நாடுகள் இந்தத் தொழில் நுட்பத்தால் பயனடைந்து வருகின்றன.
ஆழிப் பேரலைகள் தமிழகத்தையும் தமிழீழத்தையும் தாக்குவது இதுதான் முதலாவது முறை அல்ல. வரலாற்றில் முறையாகப் பதிவு செய்த ஆழிப்பேரலைகள், திபி 1912 (1881)இலும், திபி 1972 (1941)இலும் தமிழகத்தைத் தழுவியுள. அதற்கு முன்னரும் தமிழகக் கரைகளை ஆழிப்பேரலைகள் பலமுறை தழுவியிருக்கலாம்.
மாமல்லபுரக் கோயில்கள் கடலுக்குள் சென்றுவிட்டன. பூம்புகாரை 1,800 ஆண்டுகளுக்கு முன்பாக ஆழிப்பேரலை விழுங்கிய செய்தியை,
அணிநகர் தன்னை அலைகடல் கொள்க, என
இட்டனள் சாபம், பட்டது இதுவால்,
கடவுள் மாநகர் கடல்கொளப்; பெயர்ந்த
வடிவேல் தடக்கை வானவன் போல,
விரிதிரை வந்து வியநகர் விழுங்க
ஒருதனி போயினன் உலக மன்னவன்.
வரி 199-204, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
மணிமேகலைக் காப்பியத்தில் காணலாம்.
கடல் தரையில் நிகழும் நிலநடுக்கங்களும் எரிமலைகளும் ஆழிப் பேரலைகளை எழுப்புகின்றன.
புவியின் அமைப்பே நிலநடுக்கத்துக்கும் எரிமலைகளுக்கும் காரணம். உருண்டையான புவியின் நடுவே கூழாகத் திரண்ட எரிதழல் குழம்பு உள்ளது. இந்த வெப்பக் குழம்பை மூடி, 100 கிமீ அளவிலான தடித்த கோது உள்ளது.
16 பெரிய தகடுகள் இணைந்ததே இந்தக் கோது. இப் பெரிய கண்டத் தகடுகளை ஒட்டிச் சிறு சிறு தகடுகளும் உள்ளன.
தன்னைத் தானே சுற்றுவதுடன், சூரியனையும் சுற்றி வருவது பூமி. பாரிய இந்த அசைவுகளால் தகடுகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் எல்லைகளில், உராய்வுகள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த உராய்வுகளால் சில இடங்கள் பிளவுறும், சில இடங்கள் குவியும். இதனால் கண்டங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
இந்த உராய்வுகளே நிலநடுக்கங்களின் அடிப்படைக் காரணி.
இந்தியத் துணைக்கண்டமும் சுற்றியுள்ள கடலும் இத்தகைய ஒரு கண்டத் தகட்டின் மேல் உள்ள பகுதியே. இந்தத் தகட்டின் பெயர் இந்தியத் தகடு.
இந்தியத் தகட்டுக்குக் கிழக்கே சுந்தரத் தகடு உள்ளது. இவ்விரண்டுக்கும் இடையே சிறிய தகடு ஓன்று உண்டு. பர்மாக் குறுந்தகடு எனப் பெயர் கொண்ட அத் தட்டின் மேல் அந்தமான் நக்காவரத் தீவுக் கூட்டமும் சுற்றியுள்ள கடலும் உள்ளன.
இந்த பர்மாக் குறுந்தகட்டின் ஓரங்களும் பஇ தகடுகளின் ஓரங்களைப் போல எப்பொழுதும் உராய்ந்து கொண்டும் குவிந்துகொண்டும் இருக்கின்றன. இதனால் நிலம் எப்பொழுதும் நடுங்கிக் கொண்டே இருக்கிறது.
பல நடுக்கங்கள் நம் புலனுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் கருவிகள் அவற்றைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் பலவற்றில் இத்தகைய் பதிவு கருவிகள் உள. இந்தியாவில் வானிலை ஆய்வுத் துறையினர் 58 மையங்களில் இக்ருவிகளைப் பொருத்தி உள்ளனர். இவை தவிர இந்திய புவியியல் கழகத்தினரும் இத்தகைய பதிவு மையங்களை வைத்திருக்கின்றனர்.
உலகில் எங்கு நிலநடுக்கம் ஏற்படினும் எந்தக் கருவியிலும் அது பதிவாகும். பூமியில் எந்தப் பகுதியில் எந்த அளவில் நிலநடுக்கம் வந்துளது என்பதும் பதிவாகும்.
26.12.2004 ஞாயிறு காலை, ஆழிப் பேரலையைத் தட்டி எழுப்பிய நிலநடுக்கமும் இந்தியக் கருவிகளில் பதிவாயின. உலக நாடுகளில் உள்ள ஏனைய பல கருவிகளிலும் பதிவாகின. இந்திய எல்லைக்கு அப்பால் இந்த நிலநடுக்க மையம் இருந்ததால், இந்தியப் பதிவாளர் அதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை.
கண்டத் தகடு ஒன்று மற்றதுடன் உராய்ந்து, சிறிய தகடு பெரிய தகட்டிற்குக் கீழாகச் சிறிதே நகர்ந்ததால், அதுவும் கடலுக்கடியில் இந்த நகர்வு நிகழ்ந்ததால், தகடுகளுக்கு மேலேயுள்ள நீர் திடீரெனத் தடுமாறியது, நிலை மாறியது.
குளத்துள் வீழ்ந்த பாறாங்கல் எற்படுத்தும் கலக்கம், பாரிய அளவில் கடலுள் ஏற்பட்டது. கண்டத் தகட்டின் சாய்வு ஏற்படுத்திய வெற்றிடம், நீர்த் தொகுப்பின் வழமையைக் குலைத்தது. ஆழிப் பேரலையைத் தோற்றுவித்தது.
சென்னையின் தென்கிழக்கே 2028 கிமீ. தொலைவில் சுமத்திராத் தீவின் வடமுனை உள்ளது. இந்த வடமுனையின் மேற்கோரமாக, பர்மாக் குறுந் தகட்டின் எல்லை செல்கிறது. (வரைபடம் பார்க்க)
இந்தப் பர்மாக் குறுந்தகடு அசைவதற்கு முன்பு, தென் பசிபிக் கடலின் தட்டுகள் அசைந்தன. 21.12.2004 தொடக்கம் 24.12.2004 வரை பதிவான நிலநடுக்கத் தொடர்கள் (பட்டியல் பார்க்க) 26.12.2004இன் நிலநடுக்கத்தைத் தூண்டின போலும்.
26.12 ஞாயிறு அன்றும் ஒரே ஒரு நிலநடுக்கம் மட்டும் நிகழவில்லை. காலை முதல் மாலை வரை அடுக்கடுக்காக நிலம் நடுங்கியது (பட்டியல் பார்க்க). பர்மாக் குறுந்தகடு அசைந்துகொண்டே இருந்தது.
ஆனால் அந்த அசைவுகள் ஆழிப் பேரலையை எழுப்பவில்லை. கடலில் சிறிய தாக்கத்தை அவை ஏற்படுத்தி இருக்கும். நமக்குப் புலனாகவில்லை. சிறிய கடலலை அசைவுகளையும் நுணுகிக் கண்டறியும் கருவிகள் உள.
ஆழிப்பேரலைகள் கடலில் தோன்றிப் பயணிக்கின்றனவா என்பதை முன்கூட்டியே கண்டறிய, அமெரிக்க மாநிலமான ஹவாய்த் தீவில் ஓர் ஆய்வு மையம் உளது. பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 26 நாடுகளின் கூட்டமைப்பு இந்த ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. ஆழிப் பேரலை தோன்றிப் பயணிக்கும் போதே இந்த மையம் எச்சரிக்கை அறிவிப்பை இந்த 26 நாடுகளுக்கும் அனுப்புகிறது.
கடலின் தரையில் அமைந்துள்ள ஒரு கருவி நீரின் அழுத்த வேறுபாடுகளைக் கண்டறியும். ஆழிப் பேரலைக்குரிய குறி காணப்படின், கடற்பரப்பில் மிதக்கும் கருவிக்குச் செய்தி அனுப்பும். மிதவைக் கருவியில் இருந்து வானொலி அலைகள் செய்மதி மூலம் ஹவாய் மையத்துக்குச் செய்தியை அனுப்பும். (படங்கள் பார்க்க)
உடனே பசிபிக் பெருங்கடலை ஒட்டிய நாடுகளுக்குச் செய்தி பரவும். தானாகவே எச்சரிக்கை மணியும் சங்கும் ஊதும் ஒலிபரப்பிகள் உள்ளிட்ட ஆபத்து எச்சரிக்கைகள் கரையோரமெங்கும் மக்களைத் தட்டியெழுப்புகின்றன. அந்த நாடுகளில் உயிர்ச் சேதம் முற்று முழுதாகத் தவிர்க்கப்படுகிறது. முக்கிய ஆவணங்கள், பொருள்கள், ஆபத்துத் தரும் இரசாயனப் பொருள்கள், அணுக் கதிர்க்கழிவுகள் யாவையும் உடன் அப்புறப்படுத்த இந்த எச்சரிக்கை மிகவும் பயன்படுகிறது.
தாய்லாந்து நாட்டின் கிழக்குக் கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி, இந்த எச்சரிக்கை வசதி உண்டு. ஆனால் இந்துப் பெருங்கடலை ஒட்டி இந்த எச்சரிக்கை அறிவிப்பு வசதிகள் இல்லை. எனவேதான் தாய்லாந்திடம் என்ன உதவி வேண்டும் என அமெரிக்கா கேட்டபோது, யாம் கேட்பவை பொன்னும் பொருளுமல்ல போகமுமல்ல - நின்பால், இரப்பது ஆழிப்பேரலை கண்டறியும் தொழில்நுட்ப அறிவும் கருவிகளுமே எனத் தாய்லாந்து பதில் கூறியுள்ளது.
இந்துப் பெருங்கடலை ஒட்டிய நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை அமைப்பின் தேவையை 26.12.2004இன் ஆழிப் பேரலை எடுத்துக்கூறியுள்ளது. அந்தத் தேவையை உணர இந்த நாடுகள் கொடுத்த விலை 160,000 உயிர்கள். அவற்றுள, 50,000 உயிர்கள் தமிழருடையன. உயிர்கள் மட்டுமல்ல, உடமைகளும் பெருமளவு அழிந்தன, தமிழரின் கடல் வலிமையுமல்லவா தளர்ச்சி கண்டது?
இயற்கைக்கும் நமக்கும் இடையே இசைவான இணக்கம் வேண்டும். அகழ்வாரைத் தாங்கும் நிலம்தான் எனினும், அதற்காக எல்லைகளை மீறுவதா? சுற்றுச் சூழல் மீதான கவனத்தையும் இந்த ஆழிப் பேரலை நமக்குச் சொல்லாமல் சொல்லிச் சென்றுளதே!





பட்டியல் 1
நாள் நிகழ்வு
19.12.2004 தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, பிஜிப் பகுதி, பிலிப்பைன்ஸ் பகுதி, என பசிபிக் பெருங் கடல் கரையோரமெங்கும்.
20.12.2004 அத்திலாந்திக் கடல், பசிபிக் பெருங்கடல் பகுதிகள்.
21.12.2004 பசிபிக் கடலைச்சுற்றிய பகுதிகள்
22.12.2004 கிழக்குப் பசிபிக் பெருங்கடல் பகுதிகள்
23.12.2004 வட பசிபிக் கெருங்கடல் பகுதிகள்.
24.12.2004 இந்தோனீசியாவின் சாவகம், மேற்குப் பசிபிக் பெருங்கடல் பகுதிகள்.


பட்டியல் 2
26.12.2004
நேரம் இறிக்ரர் அளவு இடம்
06.28 8.9 சுமத்திரா அருகே
07.18 5.9 வட சுமத்திரா
07.45 5.8 அந்தமான தீவுகள்
07.52 6.0 நக்காவரம் தீவுகள்
08.04 5.8 வட சுமத்திரா
08.06 5.8 அந்தமான் தீவு
08.21 6.0 அந்தமான் தீவு
08.29 5.9 வட சுமாத்திரா
08.38 6.1 அந்தமான் தீவுகள்
09.51 7.3 நக்காவரம் தீவுகள்
11.52 5.7 அந்தமான் தீவுகள்
12.37 5.7 அந்தமான் தீவுகள்
13.08 5.8 அந்தமான் தீவுகள்
14.50 6.5 நக்காவரம் தீவுகள்
15.49 6.2 அந்தமான் தீவுகள்
16.35 6.3 அந்தமான் தீவுகள்

இப்பட்டியலில் உள்ள தகவல்கள் அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் புவியியல் ஆய்வகம், அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் தேசிய கடலியல் துறை ஆகியனவற்றின் மின்னம்பல தளங்களில் திரட்டியன

Monday, October 03, 2005

பவளப் பாறைகளை வளர்க்கலாம்,

மறவன்புலவு க. சச்சிதானந்தன், (ஐ.நா. முன்னாள் ஆலோசகர்)
பூஞ்சணவன், காளான், வைரசு, கிருமி, அமீபா என்பன விலங்கு உயிர்க் கூர்ப்பின் தொடக்க நிலைகள்.
குடலிகள் அடுத்த நிலை. பவளக் குடலி, சொறிமீன் குடலி என்பன விலங்கு உயிர்க் கூர்ப்பின் இரண்டாவது நிலை. உயிர்க்கலங்கள் சேர்ந்து, உணவைச் செரிக்கும் குடலுறுப்பும், தசை, கூடு போன்ற பாதுகாப்பு உறுப்பும், இனப்பெருக்க உறுப்பும் சேர்ந்து, விலங்குக் கூர்ப்பில் இரண்டாவது நிலையாகப் பவளக் குடலிகள் கொண்ட விலங்குக் குடும்பம் எழுந்தது.
குடலிகள் தம்மைச் சுற்றிப் பாதுகாக்கச் சுண்ண உப்புகளால் அமைக்கும் கூடுகளே பவளங்கள். இப்பவளக் குடலிகள் தனியன்களாகவோ, கூட்டுத் தொகுதிகளாகவோ வாழ்கின்றன. கூட்டுத் தொகுதிகளாக, ஒன்றன்மேல் ஒன்றாக, அடுக்கடுக்காகக் குடலிகள் சேர்ந்து அமைக்கும் தொடர்ச்சியான சுண்ணக் கூடுகளே பவளப் பாறைகள்.
பூனை சார் விலங்குகள் ஒரே வகைக் குடும்பமாக இருப்பினும், சிறுத்தை, புலி, பூனை, சிங்கம் எனப் பல்வேறு இனங்களாக இருப்பதுபோல, பவளக்குடலிகள் ஒரே வகைக் குடும்பமாக இருப்பினும் பல்வேறு இனங்களாக இருக்கின்றன. இதனாலன்றோ, கடற்கரையில் நம் கண்ணுக்குத் தெரியும் பவளக் குடலிக் கூடுகள் பல்வேறு வண்ணத்தினதாக, வடிவினதாக, அளவினதாக இருக்கின்றன.
உவர் நீரில் பவளக் குடலிகள் வாழ்கின்றன, வளர்கின்றன.
கடற்கரையோரங்களிலும், கடனீரேரிகளிலும், களப்புகளிலும், ஆற்றுமுகத்துவாரங்களிலும் நீரின் உவர்மை அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும். நெடுங்கடலுள் நீரின் உவர்மை மாறாது (3.5%) நீடிக்கும். மழை தொடர்ந்து பெய்யாவிட்டால், நெடுங்கடலின் நிலையான உவர்மையின் அளவும் அதிரிக்கும், நீர்மை குன்றிவிடும் என்கிறார் வள்ளுவர் (குறள் 17) கரையோரக் கடல் எனாது, நெடுங்கடல் என வள்ளுவர் குறிப்பிட்டுக் கூறியதைக் கவனிக்க.
சிறப்பாக, பூமியின் நடுக்கோட்டை ஒட்டிய உலர்வலயத்தில், கடற்கரை ஓரங்களின் உவர்மையின் அளவு ஏறும், இறங்கும். இந்த உலர் வலயக் கரையோரக் கடல்களே பவளக் குடலிகளின் நெருக்கமான வாழ்விடங்கள். 50 மீ. ஆழத்துக்குக் கீழே பவளக் குடலிகள் வாழமாட்டா; வெளிச்சம் நிறைந்த சூழல் இவற்றுக்குத் தேவை; 18 பாகை செல்சியசுக்குக் கீழே உள்ள குளிர்மையைப் பவளக் குடலிகள் ஏற்று வாழமாட்டா.
கடலில் எப்பொழுதும் ஏதோ ஒரு நீரோட்டம் இருந்துகொண்டே இருக்கும். நாள்தோறும் வெள்ளமும் வற்றும் மாறிமாறி வரும்; பருவ நீரோட்டங்கள் இருக்கும். இந்த நீரோட்டங்கள் பவளக் குடலிகளுக்குச் சாதகமாகவும் அமைகின்றன, பாதகமாகவும் அமைகின்றன.
நிலையாக ஒட்டியிருக்கும் குடலிகளுக்கு மெல்லிய நீரோட்டத்தில் மிதந்து வரும் தாவர மற்றும் விலங்கு நுண்ணுயிர்களே முக்கிய உணவாகின்றன.
பவளக் குடலிகள் தம் இனப்பெருக்க உயிரணுக்களை நீரில் மிதக்க விடுகின்றன. நீரின் மேற்பரப்பில் அவை கருக்கட்டுகின்றன. வளரும் கருக்களைப் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வன நீரோட்டங்களே. பவளக் குடலிகள் ஒரே இடத்தில் வளராமல் புலம் பெயர்ந்து பல்லிட விலங்குகளாக வளர நீரோட்டம் உதவுகிறது.
கருக்கட்டிய முட்டை மேற்பரப்பிலிருந்து கீழே இறங்கி வளர்வதற்கு ஒட்டிடம் தேவை. ஒட்டிடம் ஒன்றுடன் தன்னைப் பொருத்திக் கொள்ளும் பவளக் குடலியின் குடம்பி, தன்னைச் சுற்றிச் சுண்ணக் கூட்டைக் கட்டத் தொடங்குகிறது; முதிர்ந்து வளர்கிறது. நீரோட்டம் வேகமாக உள்ள பகுதிகளில் ஒட்டிடம் அமைந்தால், ஒட்டு விடுபடக்கூடிய வாய்ப்பும், கட்டமைப்புக் குலையும் வாய்ப்புமே அதிகம். சிறப்பாக, தொகுதிகளாக, சுண்ணப் பாறைகளைக் கட்டும் பவளக் குடலிகளுக்கு ஓரளவு நீரோட்டம் போதும். கடும் நீரோட்டத்தை அவை தாங்கா. எனவே நீரோட்டம் குறைந்த ஒதுக்கிடங்கள் சுண்ணப் பாறைகளைக் கட்டியமைக்கப் பவளக்குடலிகளுக்கு ஏற்ற ஒட்டிடங்களாகின்றன.
சேதுக் கால்வாயில் பவளப் பாறைகளை இந்தப் பின்னணியில் பார்க்கவேண்டும்.
வடக்கே கோடிக் கரையை ஒட்டிய கடலிலிருந்து, தெற்கே சேது அணை வரை சேதுக் கால்வாய் அமைய உள்ளது. ஏறத்தாழ 160 கிமீ. வரை நீளும் இக்கால்வாயின் ஆழம் 12 மீ., அகலம் 300 மீ.
கோடிக் கரையை ஒட்டி 54 கிமீ. நீளத்திற்கும் சேது அணையில் 20 கிமீ. நீளத்திற்கும் உள்ள பகுதிகளில் 3 மீ. - 7 மீ. ஆழமான திடல்கள் உள்ளதால் அந்தப் பகுதிகளில் 300 மீ. அகலத்துக்கு 12 மீ. வரை ஆழமாக்க உளர்.
வங்காள விரிகுடாவின் நீரோட்டம் வடகடலான பாக்கு நீரிணைக்குள் புகுவதும் வெளியேறுவதும் வழமை. இந்த நீரோட்டமே வடகடலின் தரையை மணற்பாங்காக வைத்திருக்கிறது. வடகடலின் தரையில், சிறப்பாக, கால்வாய் அமையவுள்ள 160 கிமீ. நீளத்துக்கும் கடல் தரை முழுவதும் சேற்று மணலாக, கிளிஞ்சல்கள் புதைந்த மணலாகவே உளது. கடற்பரப்பிலிருந்து 17 மீ. வரை ஆழத்துக்கு வடகடலின் தரையில் கற்பாறைகளோ சுண்ணப்பாறைகளோ இல்லை.
வடகடலின் தரையெங்கும் பவளக் குடலிகள் ஆங்காங்கே உள. அந்தப் பவளக் குடலிகள் சேதுக்கால்வாய் அமையவுள்ள 160 கிமீ. நீளத்திற்குத் தரையில் சுண்ணப் பாறைகளாக, பவளப் பாறைத் தொகுப்புகளாக இல்லை.
வடகடலின் கிழக்குக் கரையோரத்திலுள்ள ஒதுக்குப்புறக் கடற்கரைகளில் பவளப்பாறைத் தொகுப்புகள் உள. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகரையில் வல்வெட்டித்துறை தொடக்கம் சேந்தன்குளம் வரை உள்ள கடற்கரை நீளமெங்கும் சுண்ணப் பாறைகள் உள. இந்தப் பகுதி, இடசை நீரோட்ட கால ஒதுக்கு கடலாக உள்ளதால் பவளப் பாறைகள் நெருக்கமாக உள.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களின் மேற்குக் கரையோரங்களிலும் சார்ந்த பல தீவுகளின் கரையோரங்களிலும் பவளப் பாறைத் தொகுப்புகள் உள. இடசை மற்றும் வலசை நீரோட்டங்களுக்கு ஒதுங்கு கடலாக இப்பகுதி உளதே இதற்குக் காரணம்.
வடகடலான பாக்கு நீரிணையின் தமிழகக் கரையோரத்தில் தனுஷ்கோடி முனையில் மட்டுமே பவளப்பாறைத் தொகுப்புகள் உள. கோடியக் கரையில் இருந்து, சேது அணை வரை நீளும் தமிழகக் கரையில் தனுஷ்கோடி முனை தவிர வேறு எந்தப் பகுதியிலும் எப் பவளக்குடலிகளும் சுண்ணப் பாறைகளை அமைக்கவில்லை.
வங்காள விரிகுடாவின் இடசை மற்றும் வலசை நீரோட்டங்களின் வீச்சை எதிர்கொள்ளும் கரைகளாக வடகடலின் தமிழகக் கரை இருப்பதால் அந்த வீச்சின் ஓட்டத்தைத் தாங்கியவாறு பவளக் குடலிகள் ஒட்டிவாழ முடியாததால், சுண்ணக்கூட்டுத் தொகுப்புகளை அமைக்கும் வலுவற்றதால், அங்கு பவளப் பாறைகள் இல்லை.
ஆனாலும் வடகடல் தரையில் தனியனான பவளக்குடலிகள் பல்வேறு வகையின, பல்வேறு வடிவின, பல்வேறு அளவின, அழகிதாய் செவ்விதாய் இயற்கையின் இன்பப் பூக்களாய் சொரிந்து தரையெங்கும் தனியன்களாய்ப் பரந்து கிடக்கின்றன.
சேதுக் கால்வாயை ஆழமாக்கும் இடங்களில் இவை இருக்கலாம், அகழ்மண்ணுடன் இவை வேறிடங்களில் குவியலாம். அகன்ற தரைப் பரப்பின் 300 மீ. அகலமான பகுதியிலுள்ளவை மட்டுமே அகழ்மண்ணுடன் புலம் பெயரும், கொட்டும் புதிய தரையில் வாழ முனையும். சாலை அமைக்கும் பொழுது சாய்க்கும் வேலிகாத்தானையும் ஆரையையும் காரையையும் நாகதாழியையும் இனமாக அழிக்க முடியாதோ, அதே போலத்தான் கால்வாய் அமைக்கும் பொழுது அள்ளப்படும் பவளக் குடலிகளை இனங்களை அழிக்க முடியாது.
ஒதுக்கிடங்கள் இருப்பின் பவளக் குடலிகள் சுண்ணப் பாறைத் தொகுப்புகளை உருவாக்குகின்றன என்பதைப் பார்த்தோம். செயற்கையாக ஒதுக்கிடங்களை அமைத்துக் கொடுத்தால் பவளப் பாறைகள் காலப்போக்கில் வளர்ந்து வருமல்லவா?
துறைமுகத்தில் நீண்டகாலம் பழுதடைந்து கவனிப்பாரற்றுக் கிடக்கும் கப்பல்களின் அடிப்பாகங்களில் பவளக் குடலிகள் ஒட்டுகின்றன, வளர்கின்றன; சுண்ணப் பாறைகளாகவும் பெருகுகின்றன. இவற்றுடன் மட்டியும் சிப்பியும் சேர்ந்து ஒட்டிக் கொள்கின்றன. இத்தகையன செயற்கைச் சூழல்கள்.
பாக்கு நீரிணையில் பவளப் பாறை வளரும் ஒதுக்கிடங்களின் நீரோட்ட வேகத்தையும் ஒட்டுத் தரையின் சூழல் தன்மைகளையும் அளந்தும் தெரிந்தும் ஆய்ந்தால், அதையொட்டிய சூழலை வேறிடத்தில் அமைத்தால் அங்கும் சுண்ணப் பாறைகளைப் பவளக் குடலிகள் கட்டியெழுப்ப முயலுமல்லவா?
கால்வாயை அகழ்ந்த பின்பும், அகழ்பாதை எங்கும் ஓரக் கரைகளில் இருந்து மண் சொரிந்து நிரவ முயலும். காற்றின் வேகத்தால் பாலைவன மணல் சூயசுக் கால்வாயை நிரவுவதையும், ஆழம்பேண் அகழ்வுகள் சூயசுக் கால்வாயில் தொடர்ச்சியாக நடைபெறுவதையும் நோக்க வேண்டும். அதே போல நீரோட்டமும் கடல்தரையியல்பும் அகழ்பாதையில் மணலை நிரவாமல் தடுப்புச் சுவராக, கால்வாயின் இரு கரையோரங்களிலும் பவளக் குடலிகளிகளின் சுண்ணப்பாறைகள் அரணாகலாம்.
மாலை தீவு, இலட்ச தீவு போன்ற தீவுக் கூட்டங்களில் பவளப் பாறைத் தீவுகள் உள. கடல்மட்டத்துக்கு மேலே நிலப்பரப்புத் தெரியும். சிறிய வட்டத் தீவாகத் தெரியும்; அருகே மற்றொரு தீவு; இப்படிப் பல தீவுகள். இத் தீவுகளைத் தாங்கும் ஆழமற்ற கடல்; அத் தீவுகளைச் சுற்றி வட்டம் வட்டமாகப் பவளக் குடலிகள் அமைத்த சுண்ணப் பாறைத் தொகுப்புகள். பாறைத் தொகுப்பு வட்டத்துக்கும் நிலத்துக்கும் இடையே அலைகள் மிகக் குறைந்த ஆழமற்ற, குளம்போன்ற, ஊடுதெரியும் தெளிந்த நீருள்ள கடல். இந்தச் சுண்ணப் பாறைத் தொடர் வட்டம் அந்தத் தீவிற்கு இயற்கை தந்த காப்பரண். பேரலைகள் புகாமல், மனிதக் கொல்லிச் சுறாக்கள் புகாமல், படகுகள், வள்ளங்கள் அலைந்து உடையாமல் பவளப் பாறைக் காப்பரண் அத்தீவுக்கு உதவுகிறது.
சேதுக் கால்வாயின் அகழ்பாதையின் இருமருங்கிலும் சுண்ணப் பாறைகளைக் கட்டியெழுப்பிச் செயற்கைச் சூழலை உருவாக்க ஆய்வுகள் உதவும். மெல்லிய நீரோட்டம், பாதுகாப்பான ஒட்டிடம், சூழல் சார்ந்த பவளக்குடலி இனவகை என்பன இருந்தால் சுண்ணப்பாறைகளைப் பவளக் குடலிகள் கட்டக்கூடும்.
ஒதுக்கையும் பாதுகாப்பையும் தரக்கூடிய பலவுள், சேதாரமான பயன்படாத டயரும் ஒன்று. டயரின் உள்வளைவும் நீர்புகுந்து வெளியேறும் அகல வாயும் நல்ல ஒதுக்கிடம். பல டயர்களை ஒன்றாகக் கட்டி, நங்கூரமிட்டுக் கடல் தரையில் வைத்தால் காலப் போக்கில் டயரின் உள்வளைவுகளுள் பவளக் குடலிகளின் குடம்பிகள் ஒட்டக்கூடும், சுண்ணப் பாறைத் தொகுப்பைக் கட்டக்கூடும். காங்கேயன்துறைப் பகுதியில் வளரும் பவளக் குடலி இனவகைகளை, பவளப்பாறைத் துண்டுகளை, விதைகளாக இச்சூழலில் விட்டுவிடலாம்.
பல்லாண்டுகாலக் கட்டுமானப் பணியின் பெறுபேறாக அந்த இடத்தில் புதிய சூழல் உருவாகும். அங்கே பவளப் பாறைகள் மட்டமல்ல, மட்டிகள் உள்ளிட்ட சிப்பி வகைகளும் நிலைகொள்ளும். டயர் தொகுப்பை அமைக்கும் பாங்கை ஒட்டி, அந்தச் சூழல் பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்விடமாகும்.
மரக் கட்டைகள் பிறிதொருவகையான ஒட்டிடமும், ஒதுக்கிடமுமாம். சேதாரமுற்ற டயர்களையும் மரக்கட்டைகளையும் இணைத்தும் இத்தகைய பவளக் குடலிகளுக்கு ஒட்டிட ஒதுக்கிடங்களை உருவாக்கலாம்.
இத்தகைய ஆராயச்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின் கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையத்துக்கு நிதி ஒதுக்குவதுடன், சேதுக் கால்வாய் அகழும் காலத்திலேயே செயற்கைச் சூழலை உருவாக்கிப் பவளப்பாறை வளர்ப்பைத் தொடங்க உரியன செய்யுமாறு கோரலாம்.